×

வரத்து குறைவு எதிரொலி கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கரும்பு கட்டு ரூ.1000: மஞ்சள், இஞ்சி கொத்து ரூ.150க்கு விற்பனை

சென்னை: வரத்து குறைவு காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு கட்டு ரூ.1000க்கு விற்பனையானது. மஞ்சள், இஞ்சி கொத்து ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 11ம் தேதி முதல் வரும் 17ம் தேதி வரை சிறப்பு சந்தை செயல்படுகிறது. இங்கு கோயம்பேடு மார்க்கெட் கடைக்காரர்கள் மட்டுமல்லாது வெளி வியாபாரிகளும் பங்கேற்று பொருட்களை விற்பனை செய்யலாம்.

சிறப்பு சந்தைக்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விழுப்புரம், கடலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கடலூர், மதுரை பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது கோயம்பேடு சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுபோல், மஞ்சள், இஞ்சி கொத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாளுக்குநாள் மக்கள் கூட்டம் அதிகரித்துவருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதலாக 400 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சந்தையின்போது போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது, அங்காடி நிர்வாகம் கொடுத்த பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். வியாபாரிகள் அங்காடி நிர்வாக குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இந்தாண்டும் சிறப்பு சந்தை அமைத்து கொடுத்துள்ளனர். வியாபாரிகளுக்கு தேவையானதை அங்காடி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது’ என்றனர். போலீசார் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை செயல்பட்டு வருவதால் பொருட்களை வாங்குவதற்கு சென்னை புறநகர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக மக்கள் வருகின்றனர். இதனால் போக்குவரத்தை சீர்செய்யவும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றனர்.

The post வரத்து குறைவு எதிரொலி கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கரும்பு கட்டு ரூ.1000: மஞ்சள், இஞ்சி கொத்து ரூ.150க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,Koyambedu market ,Pongal festival ,market ,
× RELATED வெயில் தாக்கம்… வரத்து குறைவு எதிரொலி;...